Monday, 16 November 2015

ஏக்கக்  காட்சி
பாவலர்  கருமலைத்தமிழாழன்

அரைக்கால்    சட்டையுடன்
            அடுத்தவீட்டுச்    சிறுவருடன்
உரையாடி   நடந்துபள்ளி
            உளம்மகிழ    சென்றநாள்கள் !

பள்ளிநுழை   வாயில்முன்
            படர்ந்தமர    நிழலின்கீழ்
நெல்லிக்காய்    கூறுகட்டி
            நிலம்மீது    அமர்ந்தபடி !

வறுத்தநிலக்    கடலையொடு
            வறுக்காத   நாவற்பழம்
சுருக்குப்பை   பாட்டிவிற்க
            சுவையாக    உண்டநாள்கள் !

மிட்டாயில்    கடிகாரம்
            மிடுக்காகக்    கையில்கட்டி
கெட்டியான     கமர்கட்டைக்
            கேட்காத   நண்பனுக்கும் !

காக்காகடி    கடித்தளித்துக்
            கரம்கோர்த்து    நின்றதெல்லாம்
ஏக்கத்தை    நெஞ்சிற்குள்
            ஏற்றியது;  பேருந்தில் !

பூட்டிவிட்ட    சீருடையில்
            புத்தகங்கள்    பொதிசுமந்து
போட்டடைத்த    பொட்டலமாய்ப்
            பேரன்தான்    சென்றகாட்சி !

No comments:

Post a Comment

your comment please