Friday, 4 December 2015

மாசுநீக்கி மாண்புறுவோம்



மாசுநீக்கி   மாண்புறுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அகமாசோ    அனைத்துவகை    தீமை    கட்கும்
            அடித்தளமாய்   அமைகின்ற    கொடிய   மாசு
முகம்பார்த்து   அறிவதற்கும்    முடிந்தி   டாது
            முயன்றாலும்    எளிதாகத்   தெரிந்தி    டாது
நகம்போல    வெட்டியதை    எறியா    விட்டால்
            நாகம்போல்    கொத்திவிடும்   நஞ்சைக்    கக்கி
தகவாழ்வு    நாம்பெறவே    எண்ணத்    தூய்மை
            தாயன்பு     இரக்கமனம்    அமைய    வேண்டும் !

புறமாசோ    அனைத்துவகை    நோய்க    ளுக்கும்
            புதுவலிமை    ஊட்டுகின்ற    புன்மை    மாசு
நிறம்கண்ணில்     தெரிவதைப்போல்   தெரிந்தே   நாளும்
            நீரினையும்    காற்றினையும்    கெடுக்கின்   றோம்நாம்
இறப்பளிக்கும்    மதுகுடித்தல்    போல    கூற்றை
            இயற்கையினை    மாசாக்கி    அழைக்கின்   றோம்நாம்
அறம்நம்மைக்    காத்தல்போல்    சுற்றுச்    சூழல்
            அருந்தூய்மை    காக்கினது    நம்மைக்   காக்கும் !

அழுக்காறு    சினம்ஆசை    சூழ்ச்சித்    தீயை
            அகமாசு    பெருக்கிநம்மை    எரித்த    ழிக்கும்
வழுக்கவைத்துப்   புகழ்கெடுத்தே   உலக   மெல்லாம்
            வசைபாடப்    புறக்கணித்தே    இழிவு   செய்யும்
உழுதிடும்மண்    வீசுகாற்று    குடிக்கும்    தண்ணீர்
            உயிர்பறிக்கும்    நஞ்சாக்கும்    புறத்தின்    மாசு
விழுதுவிடும்    ஆலம்போல்    தழைத்து    வாழ
            விளைவிப்போம்    அகம்புறத்தில்    தூய்மை   தன்னை !